இ.பி.எஸ் காரில் செருப்பு வீசிய அமமுக நிர்வாகி கைது !
இ.பி.எஸ் காரில் செருப்பு வீசிய அமமுக நிர்வாகி கைது !

தமிழக எதிர்க்கட்சி தலைவரை எடப்பாடி பழனிச்சாமி கார் மீது செருப்பு வீசியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி கடற்கரை சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் கடந்த 5ஆம் தேதி அதிமுக மற்றும் அமமுக கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். ஒரே நேரத்தில் அதிமுக மற்றும் அமமுகவினர் திரண்டதால் அவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து காரில் வெளியே வந்தார். அப்போது அவர் வந்த கார் மீது சிலர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கற்களும் வீசியதாக கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து செருப்பு வீச்சு சம்பவம் தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த மாறன் என்பவர் போலீசில் புகார் அளித்தார். தாக்குதல் சம்பவத்திற்கு அமமுக-வினர் தான் காரணம் என கூறியிருந்தார். இது தொடர்பாக அமமுகவினர் மீது அண்ணா சதுக்கம் போலீசார் 294(பி)- ஆபாசமாக திட்டுதல்,148-பயங்கர ஆயுதங்களுடன் கலகத்தில் ஈடுபடுதல், 323- காயம் ஏற்படுத்துதல், 506(1)- மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது இவ்விவகாரம் தொடர்பாக திருவல்லிக்கேணி லாக் நகரைச் சேர்ந்தவரும், அமமுக 114வது வார்டு பொருளாளருமான மாரிமுத்து என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவல்லிக்கேணியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தான் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசியவர் என்பது வீடியோ ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதை அடுத்து அவரை அண்ணா சதுக்கம் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

