கலைஞரின் கனவுகளை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் : இளையராஜா புகழாரம்!!
கலைஞரின் கனவுகளை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் : இளையராஜா புகழாரம்!!

கலைஞர் கருணாநிதியின் நீண்ட நாள் கனவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வைப்பார் என்று நம்புவதாக இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
கோவையில் தனியார் அமைப்பு சார்பில் கொடிசியா வளாகத்தில் இளையராஜாவின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. தனது பிறந்தநாளான நேற்று இசைநிகழ்வில் கலந்து கொண்டு இளையராஜா பாடல்கள் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
நிகழ்ச்சி துவங்கும் முன்னதாக தனது பழைய நினைவுகளை இளையராஜா மக்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், எங்கப்பா எனக்கு ஞானதேசிங்கன் என பெயர் வைத்ததை கலைஞர் அய்யா, கண்டுபிடித்து இசையுடன் சேர்த்து "இசைஞானி" என டைட்டில் வைத்தார்.

ஏராளமான மக்கள் இருந்த பொதுக்கூட்டத்தில் வைத்து "இசைஞானி" என்ற பட்டத்தை அளித்தார் கலைஞர் என தெரிவித்தார். என் தந்தை எனக்கு வைத்த பெயர் கலைஞருக்கு எப்படி தெரிந்தது எனக்கூறிய அவர், அந்த உணர்வுகளை உணர முடிந்ததுதான் கலைஞரின் சிறப்பு என்றார்.
கலைஞரின் வழியில் நம் முதல்வரும் நாட்டை வழிநடத்தி செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்த இளையராஜா, அவர் இந்த நாட்டிற்கு செய்வது அனைத்தையும் எனக்கு செய்வதாக எடுத்து கொள்கின்றேன் என்று கூறினார்.

கலைஞரிம் அவ்வளவு மரியாதை எனக்கு , எனக்கு இசைஞானி என்ற பட்டத்தை கொடுத்தார் என்பதற்கல்ல, தனிபட்ட முறையில் மக்களை முன்னேற்ற பட்ட பாடெல்லாம் அரசியல் வட்டாரத்தில் நன்றாக தெரியும், பொது வாழ்விலும் அவர் செய்த நல்ல காரியங்களும் அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.
கலைஞர் வழியில் சென்று கொண்டு இருக்கும் நம்முடைய முதல்வரும் , கலைஞரின் நீண்டநாள் கனவுகளை நிறைவேற்றி வைப்பார் என்று முழு மனதுடன் நம்புகின்றேன் என தெரிவித்தார்.
newstm.in

