தாய், மகள் கொடூர கொலை.. கொள்ளை வழக்கு- பிரபல கொள்ளையன் அதிரடி கைது !
தாய், மகள் கொடூர கொலை.. கொள்ளை வழக்கு- பிரபல கொள்ளையன் அதிரடி கைது !

வீடு புகுந்து தாய், மகளை கொலை செய்து நகைகளை திருடிய வழக்கில் பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.
விழுப்புரம் மாவட்டம கண்டமங்கலம் அருகே கலித்திரம்பட்டு பகுதியில் தட்சிணாமூர்த்தி- சரோஜா (80) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுடன் மகள் பூங்காவனம் (60). பூங்காவனத்தை 30 வருடங்களுக்கு முன்பு அம்மணங்குப்பத்தில் திருமணம் செய்து கொடுத்தனர். இவரது கணவர் தங்கவேலுவை பிரிந்து மகள் வள்ளியுடன் (29) தனது தாய் சரோஜா வீட்டிற்கு வந்து வசித்து வந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இரவில் வள்ளி உறவினர் வீட்டுக்கு சென்ற நிலையில் சரோஜாவும், பூங்காவனமும் தனியாக படுத்து தூங்கியுள்ளனர்.

இந்நிலையில் அதிகாலை 3 மணியவில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவரையும் பலமாக தாக்கியுள்ளனர். மேலும் இருவரையும் கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவர்கள் அணிந்திருந்த ஒரு பவுன் செயின், அரை பவுன் கம்மல் என ஒன்றரை பவுன் நகையை எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றனர். காலை அவர்கள் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, தாய், மகள் இருவரும் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து கண்டமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தடயங்களை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர். இதையடுத்து, கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் திருவெண்ணை நல்லூர் பகுதியில் தலைமறைவாக இருந்த கவிதாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அந்த நபர், இருவரை கொலை செய்து நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனார். கவிதாஸ் மீது விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக டிஐஜி பாண்டியன் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

