திரைப்பட பாணியில் ரெய்டு.. 117 சவரன் நகை, ரூ.2.50 லட்சம் கொள்ளை.. பெண் உட்பட 12 பேர் கைது..!
திரைப்பட பாணியில் ரெய்டு.. 117 சவரன் நகை, ரூ.2.50 லட்சம் கொள்ளை.. பெண் உட்பட 12 பேர் கைது..!

திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை வெள்ளகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (38). அதிமுக பிரமுகரான இவர் ஒப்பந்ததாரராகவும், செங்கல் சூளை அதிபராகவும் உள்ளார்.
இந்நிலையில், கடந்த 2-ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு இவரது வீட்டுக்கு இன்னோவா காரில் வந்த பெண் உட்பட ஏழு பேர், தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்துள்ளனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, பாலமுருகன் வீட்டிலிருந்த 117 சவரன் நகை, 2.50 லட்சம் ரூபாய் மற்றும் சொத்து பத்திரங்களை எடுத்துச் சென்றனர்.
இது குறித்து பாலமுருகன் கொடுத்த புகாரின்படி, செவ்வாப்பேட்டை போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து, ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரின் உத்தரவின்படி ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் கோவை சென்று, இந்த வழக்கில் தொடர்புடைய டேனியல் (55), நந்தகுமார் (39), சிவமுருகன் (52), பிரகாஷ் (29), வினோத் (42), கவிதா (30), ரென்னிஸ் (46), அஸ்கர் அலி (46), சாரதி என்ற பார்த்தசாரதி (45) ஆகிய ஒன்பது பேரை கைது செய்தனர்.
அவர்களது வாக்குமூலத்தை வைத்து வசந்தகுமார் (38), செந்தில்வேலன் (42), வெங்கடேசன் (46) ஆகியோரை பிடித்தனர். மொத்தம் 12 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அவர்களிடமிருந்து இன்னோவா கார் மற்றும் ஹூண்டாய் க்ரீடா கார், 34 சவரன் நகை, 5.51 லட்சம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டதாக, செவ்வாப்பேட்டை போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ‘திருவள்ளூர் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் ரைஸ் புல்லிங் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த செவ்வாப்பேட்டை வசந்தகுமார், செந்தில்வேலன் மற்றும் அரக்கோணம் வெங்கடேசன் ஆகிய மூவரும் கூட்டாளிகள். அந்த ஊரில் பாலமுருகன் வசதி படைத்தவர் என்பதை அறிந்து அவரது வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.
வெங்கடேசன் தீட்டிய திட்டத்தை செயல்படுத்த கோவையைச் சேர்ந்த பார்த்தசாரதி, அஸ்கர் அலி மற்றும் ரென்னிஸ் ஆகியோரை கூட்டு சேர்த்துள்ளனர்’ என்று அவர்கள் கூறினர்.

