போராட்டம் நடத்திய எம்பி ஜோதிமணி.. குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்..!
போராட்டம் நடத்திய எம்பி ஜோதிமணி.. குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்..!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. 8½ மணி நேரம் நடந்த இந்த விசாரணை இரவு 9 மணிக்கு நிறைவடைந்தது.
விசாரணை நடைபெறுவதை முன்னிட்டு, அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. சி.ஆர்.பி.எப். படையினர், கலவர தடுப்பு போலீசார், டெல்லி போலீசார் ஆகியோர் பெருமளவு குவிக்கப்பட்டு இருந்தனர்.
அணுகு சாலைகள் அனைத்தும் தடுப்புகளால் மறைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே, ராகுல் காந்தியிடம் 3-வது நாளாக இன்றும் (15-ம் தேதி) விசாரணை நடத்தப்படும் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் 3-வது நாளாக அமைதி வழி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று மூன்றாவது நாளாக அமலாக்கத்துறை சார்பில் ராகுல் காந்தியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி மகளிர் அணி சார்பில் காங்கிரஸ் அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது. அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறையினர் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.
இதனிடையே, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், ஜோதிமணியை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது சென்றனர்.
அவர்கள் பேருந்தில் ஏற்றப்பட்ட நிலையிலும், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து கோஷங்களை எழுப்பியவாறே இருந்தனர்.

