கலப்பு திருமணத்தால் கொலை மிரட்டல்! பதறித் துடிக்கும் காதல் ஜோடி!!
கலப்பு திருமணத்தால் கொலை மிரட்டல்! பதறித் துடிக்கும் காதல் ஜோடி!!

மாலையும், கழுத்துமாக கோவை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த காதல் ஜோடி, உயிருக்கு ஆபத்து உள்ளதால் பாதுகாப்பு வேண்டி தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(25). சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் வினிதா(24). இருவரும் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்தப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில், இது பெண்ணின் வீட்டிற்கு தெரியவர அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதே காரணம். எதிர்ப்பை மீறி சாதி மாறி திருமணம் செய்தால் முத்துக்குமாரை கொலை செய்வதாகவும் பெண்ணின் வீட்டினர் மிரட்டியதாக புகார் எழுந்தது. எனினும் காதலில் வினிதா உறுதியாக இருந்ததால் அவரை வீட்டில் அடைத்து வைத்தனர்.
இந்த நிலையில் வீட்டில் இருந்து தப்பிச்சென்ற வினிதா கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் முத்துக்குமாரை கலப்பு திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த வினிதாவின் உறவினர்கள் மிரட்டல் விடுப்பதாக கூறி காதல் ஜோடி காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து மனு அளித்தனர். இதனிடையே மகளை காணவில்லை என பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சங்ககிரி போலிசார் காவல் ஆணையர் அலுவலகம் வந்தனர்.
இருதரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்திய உதவி ஆணையர், இருவரையும் புலியகுளம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்.
newstm.in


