நீட் தேர்வு பயிற்சிகள் நிறுத்தப்படாது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி..!
நீட் தேர்வு பயிற்சிகள் நிறுத்தப்படாது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி..!

சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள், நர்சுகள், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; “மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்கவும், கோவையில் எய்ம்ஸ் கல்லூரி அமைக்கவும், தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்கவும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தமிழக முதல்வர் மனு வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சிகள் நிறுத்தப்படாது. நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
பொங்கல் விடுமுறை காரணமாக தடுப்பூசி முகாம்கள் இந்த வாரம் நடத்தப்படாது. தடுப்பூசி முகாம்கள் மூலம் இதுவரை 3 கோடியே 32 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 60 ஆயிரத்து 51 பேருக்கு பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது உள்ள 75 சதவிகிதம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.

