அடுத்த அட்டாக்.. தாஜ் மகாலில் இந்து கடவுள் சிலைகள் உள்ளதாக புதிய வழக்கு !!
அடுத்த அட்டாக்.. தாஜ் மகாலில் இந்து கடவுள் சிலைகள் உள்ளதாக புதிய வழக்கு !!

உலக அதிசயங்களில் ஒன்றாக இந்தியாவில் இருந்து தாஜ் மகால் இடம்பெற்றுள்ளது. இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்லும் காதல் அடையாளமாக தாஜ் மகால் உள்ளது.
முகலாய பேரரசர் ஷாஜகான், தனது மனைவி மும்தாஜ் மறைவையடுத்து, அவரது நினைவாக இந்த தாஜ் மகாலை கட்டியுள்ளார். அதனால் நினைவு சின்னங்களில் ஒன்றாகவும் அது திகழ்கிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். உலகின் அதிக விலை உயர்ந்த பளிங்கு கற்களை கொண்டு தாஜ் மகால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. திபெத் மற்றும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த கற்களில் வெள்ளை கற்கள் அதிக விலை உயர்ந்தவை.
இந்த கற்களின் சூரிய எதிரொளிப்பு தன்மையால், காலை, மாலை மற்றும் இரவு என 3 வேளைகளிலும் வெவ்வேறு நிறங்களை பிரதிபலிக்க கூடியது. இதனால், காலையில் பிங்க் நிறத்திலும், மாலையில் பால் நிறத்திலும் மாறும் தாஜ் மகால் இரவில் நிலா ஒளியில் தங்க நிறத்திலும் காட்சியளிக்கும் தன்மை கொண்டது என கூறப்படுகிறது.

தற்போது அந்த தாஜ் மகால் புதிய பிரச்சனையை சந்திக்க உள்ளது. அதாவது, தாஜ் மகாலின் மூடிய கதவுகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் மர்மங்களுக்கான விடையை தேடி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
பல சிறப்புகளை கொண்ட இந்த தாஜ் மகாலில் உலக அதிசயம் என்பதற்கு ஏற்ப வேறு சில விசயங்களும் அறியப்படுகின்றன. தாஜ் மகாலில் 22 மூடிய அறைகள் உள்ளன என கூறப்படுகிறது. அவற்றுள் இந்து தெய்வங்களின் சிலைகள் உள்ளன என கூறப்படுகிறது. அதனால், உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து இந்திய தொல்லியல் துறை அதனை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட கோரி அலகாபாத் உயர்நீதிமன்ற அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அந்த மூடிய கதவுகளுக்கு பின்னால் இந்து கடவுள் சிலைகள் உள்ளன என மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த மனுவில், சில இந்து அமைப்புகள் மற்றும் மதிப்புமிக்க புனித துறவிகள் கூறியபடி, இந்த நினைவு சின்னம் ஒரு காலத்தில் சிவன் கோவிலாக இருந்தது என தெரிவித்துள்ளனர். பல வரலாற்று ஆசிரியர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். எனினும், பல வரலாற்று ஆசிரியர்கள், முகலாய பேரரசர் ஷாஜகானால் இந்த தாஜ் மகால் எழுப்பப்பட்டது என கூறுகின்றனர்.

சிலர் தேஜோ மகாளயா என்ற தாஜ் மகால் ஆனது ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக இருக்க கூடும். அது பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களிலேயே இருக்கும் என தெரிவித்து உள்ளனர் என மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து அந்த மனுவில், 4 அடுக்கு கட்டிடத்தின் மேல் மற்றும் கீழ் புறத்தில் (தோராய அடிப்படையில் 22 அறைகள்) சில அறைகள் உள்ளன. அவை எப்போதும் மூடப்பட்டே உள்ளன. பி.என். ஓக் போன்ற பல வரலாற்றாசிரியர்கள் மற்றும் கோடிக்கணக்கான இந்து வழிபாட்டாளர்கள், இந்த பூட்டிய அறைகளில் கடவுள் சிவன் இருக்கிறார் என நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த கதவுகள் பூட்டப்பட்டு உள்ளன என இந்திய தொல்லியல் துறை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கப்பட்டு இருந்தது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
newstm.in

