ஹிஜாப்பை எதிர்க்கவில்லை.. பள்ளி சீருடையை ஆதரிக்கிறோம்: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா..!
ஹிஜாப்பை எதிர்க்கவில்லை.. பள்ளி சீருடையை ஆதரிக்கிறோம்: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா..!

“தமிழகம் என்பது பெரியார் மண் அல்ல, ஆன்மீக பூமி. நாங்கள் ஹிஜாப்பை எதிர்க்கவில்லை, பள்ளி சீருடையைதான் ஆதரிக்கிறோம்” என, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
சென்னை தி நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மக்களோடு கூட்டணி எடுத்த முடிவு நம்பிக்கை தரக் கூடியதாக உள்ளது.
செல்லும் இடமெல்லாம் பாஜக வேட்பாளர்களுக்கு மக்களிடம் ஆதரவு பெருகி உள்ளது. எத்தனை இடங்களை கைப்பற்ற முடியும் என்பது தெரியவில்லை. ஆனால், ஒரு தாக்கத்தை பாஜக ஏற்படுத்தும் என்பது உண்மை.
சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்து மக்களின் உயிரை காப்பாற்றிய அரசு மோடி அரசு. உயிர் காத்த மோடிக்கு ஒரு முறை ஓட்டு போடுங்கள் என மக்களிடம் கேட்டேன். அவர்கள், ஒருமுறை அல்ல ஒவ்வொரு முறையும் போடுவோம் எனக் கூறினார்கள்.
மேலும், பாஜகவின் வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாத திமுக, பாஜக மீது தாக்குதல் நடத்தி வருகிறது. எந்த பிரச்னையும் இன்றி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என பாஜக விரும்புகிறது.
பாஜகவின் பிரச்சாரத்திற்கு திமுக முட்டுக்கட்டையாக இருக்குமேயானால், மத்திய அரசின் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் கூறி நடவடிக்கை எடுக்க முடியும்.
தமிழகம் என்பது பெரியார் மண் அல்ல, ஆன்மீக பூமி. நாங்கள் ஹிஜாப்பை எதிர்க்கவில்லை, பள்ளி சீருடையைதான் ஆதரிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

