“திமுகவுக்கு இப்போது தேனிலவு காலம் : அப்படி இப்படித்தான் இருப்பார்கள்..!” - குஷ்பு
“திமுகவுக்கு இப்போது தேனிலவு காலம் : அப்படி இப்படித்தான் இருப்பார்கள்..!” - குஷ்பு

“சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள திமுகவுக்கு இப்போது தேனிலவு காலம்; எனவே, திமுகவை இப்போது விமர்சிப்பது சரியாக இருக்காது” என்று, குஷ்பு விமர்சித்துள்ளார்.
பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு கூறியதாவது; “கொரோனா கட்டுப்பாடு காரணமாக ‘ஜூம்’ மூலம் தினமும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் மற்றும் கட்சி பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.
திமுக இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறது. புதிதாக திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளை முதல் 3 மாதம் வரை தேனிலவு காலமாக நினைத்து எதுவும் சொல்லமாட்டோம்; அதே போல்தான் கட்சிகளுக்கும். ஆட்சிக்கு வந்ததும் தேனிலவு காலம் போல்தான். எனவே இப்போது விமர்சிப்பது சரியாக இருக்காது.

கடந்த ஆண்டு மே மாதம் ஊரடங்கு தளர்வில் எடப்பாடி பழனிசாமி மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டதற்கு ஸ்டாலின் நடத்திய போராட்டம், விமர்சனம், வெளியிட்ட கார்ட்டூன்கள் மறந்து போகுமா?
ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு எது தேவை? எது நல்லது என்பது பற்றி யோசிக்க வேண்டும். ஒன்றிய அரசு என்ற வாதம் இப்போது மிகவும் முக்கியமா? அப்படிப் பார்த்தால் இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகள் மத்தியில் மந்திரிகளாகவும் திமுகவினர் இருந்தார்கள். அப்போது ஒன்றிய அரசு, ஒன்றிய மந்திரிகள் என்று கூறி இருக்கலாம்.
கொரோனா பேரிடரில் நாடு சிக்கித் தவிக்கிறது. அதில் இருந்து மக்களை மீட்க பிரதமர் மோடியும் மத்திய அரசும் போராடுகிறது. தொற்று ஏற்பட்ட ஒரு ஆண்டுக்குள் தடுப்பூசியை தயார் செய்து மக்களுக்கு வழங்கி உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்தார்.ஆனால், ‘தடுப்பூசியால் உத்தரவாதம் இல்லை; அதை போடக்கூடாது’ என்று இவர்கள்தான் எதிர்த்தார்கள். இப்போது, அதே தடுப்பூசிதான் கொரோனாவை வெல்லும் பேராயுதம் என்றும், எல்லோரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
கோயில்களில் பெண்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று ஏதோ புதிய திட்டம்போல் பேசுகிறார்கள். ஏற்கெனவே பெண்கள் பூஜை செய்யும் பல கோயில்களில் பெண்கள்தான் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே.நான் முதலிலேயே குறிப்பிட்டதுபோல் இது தேனிலவு காலம். கொஞ்சம் அப்படி, இப்படித்தான் இருப்பார்கள். குறைந்தது 3 மாதம் ஆகட்டும். அதன் பிறகுதான் இவர்களின் செயல்பாடு சீர்தூக்கி பார்க்கப்படும்” என குஷ்பு கூறினார்.

