மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி மரியாதை!!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி மரியாதை!!

தமிழ்நாடு அரசியலில் இரும்பு பெண்மணியாக உலா வந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, 74 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா தனது 68 வயதில் உயிரிழந்தார். இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து அதிமுகவின் மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
அதையடுத்து ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் “அம்மா உணவகம், அம்மா மருந்தகம் திட்டங்களை நிறுத்துவோரின் கொட்டங்கள் அடக்கப்படும், ‘நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து என்று பொய் வாக்குறுதியளித்த முதல்வர், இனியும் தமிழர்களை ஏமாற்ற விடமாட்டோம்’ என்று உறுதிமொழி எடுத்தனர்.

