மன்னிப்பு கோர வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்.. நோட்டீஸ் அனுப்பிய மகளிர் ஆணையம்.. சிபிஎஸ்இ செய்தது சரியா?
மன்னிப்பு கோர வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்.. நோட்டீஸ் அனுப்பிய மகளிர் ஆணையம்.. சிபிஎஸ்இ செய்தது சரியா?

சிபிஎஸ்இ தேர்வில் பெண்கள் குறித்து சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டதற்கு விளக்கம் அளிக்க டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 11ஆம் தேதி நடந்த 10ஆம் வகுப்பு ஆங்கில தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்வி ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு வினாத்தாளில், மனைவிகள் கணவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதை பின்பற்றுவதில்லை. இதனால் குழந்தைகள் ஒழுக்கமாக வளர்வதில்லை என்ற வகையில் கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்வியால் கடும் சர்ச்சை ஏற்பட்டது. பிற்போக்குத்தனமான கேள்வி என பெற்றோர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக சிபிஎஸ்இ நிர்வாக தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கல்வி நிபுணர்கள் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் சர்ச்சையான கேள்விகள் அனைத்தும் நீக்கப்படுகின்றது. மேலும் அதற்கு உண்டான முழு மதிப்பெண்களும் மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மன்னிப்பு கோர வேண்டும் என எதிர்கட்சிகள் மற்றும் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கும் சில கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் சிபிஎஸ்இ தேர்வில் பெண்கள் குறித்து சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டதற்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், பாலின பாகுபாடை ஊக்குவிக்கும் வகையில், கேட்கப்பட்ட கேள்வி தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
newstm.in

