இளம் ஆண் காவலர்களை குறிவைத்து பல லட்சம் சுருட்டிய பலே பெண்!!
இளம் ஆண் காவலர்களை குறிவைத்து பல லட்சம் சுருட்டிய பலே பெண்!!

ஃபேஸ்புக் மூலம் இளம் ஆண் காவலர்களை குறிவைத்து லட்சக்கணக்கில் பணமோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்த பாரதிராஜா (25) என்பவர் மணிமுத்தாறில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் சிறப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களாக சென்னை திருவொற்றியூரில் உள்ள கடலோர காவல் படையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் பாரதிராஜாவின் முகநூல் பக்கத்தில் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா (26) என்ற பெண் நண்பராக அறிமுகமானார். நாளடைவில் முகநூல் நட்பு காதலாக மலர்ந்தது
தான் மருத்துவம் படிப்பதாக கூறிய அந்த பெண், காவலர் பாரதிராஜாவை திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இந்நிலையில், தன்னுடைய மருத்துவ படிப்பிற்கு பணம் தேவைப்படுவதாக கூறி பாரதிராஜாவிடம் கேட்டுள்ளார்.
தனது தந்தை பழனியின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்துமாறு கூறி படிப்படியாக பாரதிராஜாவிடம் இருந்து 14 லட்சம் ரூபாயை ஏமாற்றி பெற்றார். இதற்கிடையே, பாரதிராஜாவின் உறவினரான மகேந்திரன் என்பவரிடம் முகநூல் பக்கத்தில் மற்றொரு பெண் போல் ஐஸ்வர்யா பழகியுள்ளார்.

பின்னர் மகேந்திரனை ஏமாற்றி, 20 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார். மகேந்திரன் மூலமாக ஒரு சவரன் தங்க நகை, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை ஏமாற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் பாரதிராஜா, மகேந்திரன் ஆகிய இருவரிடமும் பேசுவதை ஐஸ்வர்யா நிறுத்திவிட்டார்.
இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பாரதிராஜா புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆவடி காவல் துணை ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
ஐஸ்வர்யாவின் செல்போன் எண்களைக் கொண்டு அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீசார், ஐஸ்வர்யா மற்றும் அவரது பெற்றோரை கைது செய்தனர். விசாரணையில் ஐஸ்வர்யா ஆவடி வீட்டு வசதி வாரிய பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு செல்போன் மற்றும் லேப்டாப்பை வைத்து கொண்டு பங்கு சந்தையில் முதலீடு செய்து அதன் மூலம் பணியாற்றி வருவதாக தாய் தந்தையிடம் பொய் கூறியுள்ளார். அவரது முகநூல் பக்கத்தை ஆராய்ந்ததில், இளம் காவலர்களை மட்டுமே நண்பர்களாக்கி அவர்களிடம் தான் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
அவருடைய முகநூல் கணக்கில் சுமார் 200 காவல் துறையினர் நண்பர்களாக உள்ள நிலையில் யார் யாரிடம் மோசடி செய்துள்ளார் என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
newstm.in

