பாரா ஒலிம்பிக்.. 3 தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மதுரை மாணவி !!
பாரா ஒலிம்பிக்.. 3 தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மதுரை மாணவி !!

பிரேசிலில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இறகுப்பந்து பிரிவில் 3 தங்க பதக்கங்களை வென்று மதுரை மாநகராட்சி பள்ளி மாணவி ஜெர்லின் அனிகா சாதனை படைத்துள்ளார்.
மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த ஜெயரட்சகன் மகள் ஜெர்லின் அனிகா (17). மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் இவர், இறகுப்பந்து போட்டி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.
பிரேசிலில் நடைபெற்று வரும் 24ஆவது செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இறகுப்பந்து பிரிவு போட்டியில் பங்கேற்றார்.

அதில், ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியாவின் கே.நியூடோல்ட்டை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். கலப்பு இரட்டையர் பிரிவில் ஜெர்லின் அனிகா - அபினவ் சர்மா ஜோடி மலேசியாவின் பூன் - டியோ ஜோடியை வீழ்த்தி பதக்கம் வென்றுள்ளது. மேலும் குழு இறகுப்பந்து போட்டியிலும் தங்கம் வென்று மொத்தமாக மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார்.
ஜெர்லின் அனிகா, இந்திய அளவில் பல்வேறு தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.
newstm.in

