மக்களே உஷார்..!! சென்னையில் ஒரே நாளில் ரூ. 60 ஆயிரம் அபராதம் வசூல்!!
மக்களே உஷார்..!! சென்னையில் ஒரே நாளில் ரூ. 60 ஆயிரம் அபராதம் வசூல்!!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து காணப்பட்ட நிலையில், அண்மை நாட்களாக தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து சுமார் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும் பொழுது தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேற்கண்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ள மாநகராட்சியின் சார்பில் அந்தந்த வார்டுக்குட்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், இந்தக் குழுக்களின் ஆய்வின் போது முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து ஜூலை 6 முதல் தமிழ்நாடு பொதுசுகாதாரச் சட்டம் 1939-ன் படி ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் மாநகராட்சியின் குழுக்களின் மூலம் இன்று (06.07.2022) மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் முகக்கவசம் அணியாத 121 நபர்களிடமிருந்து ரூ.60,500/- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

