போக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி
நம்மூரில் காலை 10 மணி அலுவலகத்திற்கு வீட்டை விட்டு 8 மணிக்கு கிளம்பத் துவங்கினால் தான் நேரத்திற்கு சரியாய் போய் சேர முடியும். அந்த வாகன நெரிசலிலும் போக்குவரத்து சிக்னல்களில் பல போலீசார், சிக்னல்களை கவனிக்காமல், போக்குவரத்தைச் சீர் செய்யாமல், ஹெல்மெட்

நம்மூரில் காலை 10 மணி அலுவலகத்திற்கு வீட்டை விட்டு 8 மணிக்கு கிளம்பத் துவங்கினால் தான் நேரத்திற்கு சரியாய் போய் சேர முடியும். அந்த வாகன நெரிசலிலும் போக்குவரத்து சிக்னல்களில் பல போலீசார், சிக்னல்களை கவனிக்காமல், போக்குவரத்தைச் சீர் செய்யாமல், ஹெல்மெட் அணியாமல் யார் வருகிறார்கள், வெள்ளந்தியாய் யார் தெரிகிறார்கள் என்று கல்லா கட்ட நினைத்து வழிமறித்துக் கொண்டிருப்பார்கள்.
ஆனால், அமெரிக்காவில் போக்குவரத்து அதிகமான வாகன நெரிசல்கள் மிகுந்த சாலையில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க உதவி நெகிழ வைத்திருக்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி. அவரின் செயல் சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
அமெரிக்காவின், உடா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் வேலி நகரில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் ஜெரேமி டீன். நேற்றைய முந்தினம் அந்தப் பகுதியில் இருக்கும் பாங்கெர்டர் நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் ஓர் ஓரமாக இரண்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டு, தனது போலீஸ் வாகனத்தின் வேகத்தை குறைத்தார்.
அப்போது அதில் ஒரு வாகனத்திற்குள் இருந்து கீழே இறங்கிய நபர், பதற்றத்துடன் இவரது போலீஸ் வாகனத்தை நிறுத்தினார். ‘எனது மனைவி பிரசவ வலியால் துடிக்கிறார். மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்வதற்கு முன்பே பிரசவம் ஆகிவிடும் போல் தெரிகிறது. என்ன செய்வது எனத் தெரியவில்லை’ என்று கண்களில் மிரட்சியும், கண்ணீருமாய் இவரிடம் கூறினார்.
உடனே போலீஸ் அதிகாரியான ஜெரேமி டீன், இது குறித்து ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் அளித்துவிட்டு தனது வாகனத்திற்குச் சென்று தனது கையுறைகளை எடுத்து வந்து அந்த பெண்ணிற்கு காருக்குள்ளேயே பிரசவம் பார்த்தார். குழந்தை பிறந்தவுடன் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தது. பின்னர் தாயும் சேயும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனால் அந்த சாலையில் போக்குவரத்து சற்று நேரம் தடைபட்டது. அதன் பின்னர் டீன் தனது பணியை கவனிக்கச் சென்று விட்டார். டீனின் இந்த செயலுக்கு அப்பகுதியினரிடையேயும், சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
newstm.in

