பிரசாந்த் கிஷோர் உடன் கைகோர்த்த திமுக.. 2021க்கு புது வியூகம்..
பிரசாந்த் கிஷோர் உடன் கைகோர்த்த திமுக.. 2021க்கு புது வியூகம்..

வரும் 2021ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் திட்டமிடலுக்காக பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் தி.மு.க இணைந்துள்ளது. தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தல் மற்றும் 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பாஜகவிற்கு ஆதரவாக நரேந்திர மோடியுடன் பணியாற்றியவர் ஆவார். இவர் வகுத்து தந்த திட்டத்தின்படி செயல்பட்ட பா.ஜ.க குஜராத் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்திலும் பெரும்பாலான நாடாளுமன்ற இடங்களை பா.ஜ.க கைப்பற்ற இவரது திட்டங்களே கை கொடுத்தது. இதன் காரணமாக பிரசாந்த் கிஷோர் தேசிய அளவில் அரசியல் கட்சியினரிடையே பெரும் புகழ் பெற்றார்.
இதனை அடுத்து ஒவ்வொரு மாநிலக்கட்சிகளும் தங்களின் மாநிலங்களுக்கு வந்து தங்கள் கட்சியை வெற்றியடைய செய்யும் படியும் பிரசாந்திற்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, தெலங்கானாவில் ஜெகன்மோகன்ரெட்டி, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், பீகாரில் நிதிஷ் குமார் ஆகியோரை முதலமைச்சராக்கிய பெருமை பிரசாந்த் கிஷோரை சேரும். இந்நிலையில் தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி அவர் திமுகவுக்காக பணி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வரும் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திட்டமிடலில் ஒத்த கருத்துடைய தமிழக இளைஞர்கள் உதவிட தங்களுடன் இணைந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
“தமிழ்நாட்டின் பழைய பெருமைகளை மீட்டெடுக்க, எங்களுடைய திட்டங்களை வடிவமைக்க உதவுவதற்கும் 2021-ம் ஆண்டு தேர்தலுக்கும் ஐ-பேக்கின் கீழ் எங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு பிரகாசமான மற்றும் ஒத்த கருத்து கொண்ட இளம் வல்லுநர்கள் இணைந்துள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in




