தமிழகத்தில் தனியார் ரயில்... பல மடங்கு பயணக் கட்டணம் உயரும் அபாயம்!
தமிழகத்தில் தனியார் ரயில்... பல மடங்கு பயணக் கட்டணம் உயரும் அபாயம்!

ரயில்வே துறையின் நிதி ஆதாரத்தை மேம்படுத்துவது, சீரமைப்பது குறித்து பல்வேறு முக்கிய பரிந்துரைகளை விவேக் தேவராய் குழு கடந்த 2015ஆம் ஆண்டு தெரிவித்தது. இதனையடுத்து வருவாயை பெருக்க மண்டல அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிப்பது, தனியார் மூலம் பயணிகள் ரயிலை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் 150 தனியார் ரயில்களை இயக்க முடிவெடுத்து, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அவ்வகையில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோத்பூர், மும்பை, டெல்லி, செகந்தராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும், தாம்பரத்தில் இருந்து திருச்சி, நெல்லை, மதுரை, கன்னியாகுமரி பெங்களூரு என 11 தனியார் ரயில்கள் தமிழகத்தின் இயக்கப்படவுள்ளன.
இதற்கான டெண்டர் கோரும் பணிகள் முடிவடைந்து நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தனியார் வசம் ரயில்கள் ஒப்படைக்கப்பட்டால் ரயில் கட்டணம் பன்மடங்கு உயரும் அபாயம் ஏற்படும். சாமானிய மக்கள் ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் எண்ணத்தையே கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவர் என்ற கருத்து நிலவுகிறது. ஆகையால் இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும் என ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
newstm.in


