கேரளாவிலும் நீடிக்கும் கனமழை.. 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் !!
கேரளாவிலும் நீடிக்கும் கனமழை.. 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் !!

வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது கேரளாவிலும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆழப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நேற்று இரவு முதல் பரவலாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் இன்று அதி தீவிர கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
தொடர்ந்து கொட்டிவரும் மழையால் அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இடுக்கியில் உள்ள சிறுதோணி அணை முழு கொள்ளளவை நெருங்கியதையடுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கனமழை காரணமாக மாநிலத்தின் தெற்கு பகுதியில் பல்வேறு சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
newstm.in

