தமிழகத்தில் டிசம்பர் 9ஆம் தேதி வெடிக்கிறது போராட்டம்!!
தமிழகத்தில் டிசம்பர் 9ஆம் தேதி வெடிக்கிறது போராட்டம்!!

திமுக அரசு மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அதிமுக, அதனை கண்டித்து வரும் 9ஆம் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகைளை உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கவும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்குப் போதுமான இழப்பீடு அளிக்கவும், பொங்கல் விழாவைக் கொண்டாட உதவும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு மூடுவதைக் கண்டித்தும், அரசின் அலட்சியத்தால் கடுமையாக உயர்ந்திருக்கும் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வை எதிர்த்தும்,தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலோ, மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதிலேயோ சிறிதும் அக்கறை செலுத்தாமல் வாய் சவடால் ஆட்சி நடத்திகொண்டிருப்பதாகவும் அதிமுக விமர்சித்துள்ளது.
மாவட்ட தலைநகரங்களில் டிசம்பர் 9ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

