காட்டுமிராண்டித்தனமாக நடைபெற்ற பொதுக்குழு... வைத்திலிங்கம் பகீர் குற்றச்சாட்டு
காட்டுமிராண்டித்தனமாக நடைபெற்ற பொதுக்குழு... வைத்திலிங்கம் பகீர் குற்றச்சாட்டு

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. பெரும் கூச்சல் குழப்பத்துடன் நிறைவு பெற்ற நிலையில் இதில் அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், ஜேடிசி பிடிபாகரன் உள்ளிட்டோருடன், வைத்திலிங்கம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் 23 வரைவு தீர்மானங்களை ரத்து செய்திருக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. தீர்மானங்கள் ரத்தானதால் பொதுக்குழுவே செல்லாது என்று காட்டமாகக் கூறினார்.
மேலும், பதவி வெறியில் நடந்தது பொதுக்குழுவே அல்ல, அரை மணி நேரம் நடந்த ஓரங்க நாடகம். பொதுக்குழுவில் பொய்யாக கையெழுத்திட்டு காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டுள்ளனர். இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நீதிமன்ற ஆணை மீறப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் நீதிமன்ற ஆணை மீறப்பட்டுள்ளதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத்தொடர உள்ளோம்.

அதிமுக பொதுக் குழுவில் கத்தியவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் அல்ல, கூலிக்கு அழைத்து வரப்பட்டவர்கள். தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பொதுக்குழுவே செல்லாதக் கூட்டமாகிவிட்டது. காட்டுமிராண்டித்தனமாக பொதுக் குழு நடந்துள்ளது. பொதுக் குழுவை கூட்டுவதற்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. பொதுக்குழுவைக் கூட்ட கட்சியின் அவைத்தலைவருக்கு அதிகாரம் இல்லை.
பொதுக்குழுவில் இன்று அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டது செல்லாது. கட்சியின் அவைத் தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் தேர்வு செய்ய முடியும் என்றும் ,வைத்திலிங்கம் கூறினார்.
newstm.in

