டப்பிங் சங்கத் தலைவரானார் ராதாரவி! சின்மயி வேட்புமனு தள்ளுபடி!
டப்பிங் சங்கத் தலைவரானார் ராதாரவி! சின்மயி வேட்புமனு தள்ளுபடி!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக மீ டூ இயக்கம் மூலமாக பிரபல பின்னணிப் பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி சமூக ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவித்தார். இதன் காரணமாக, சங்க விதிகளை மீறி சின்மயி செயல்பட்டதாக டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து கடந்த 2018ல் நீக்கப்பட்டார்.

சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்த்து சென்னை 2வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் சின்மயி வழக்குத் தொடர்ந்தார். கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்து சங்கத்துக்கான நுழைவுக் கட்டணம், வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் உள்ளிட்டவற்றை சின்மயி செலுத்தி உள்ளார். இதையடுத்து, சின்மயியை நீக்கியதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில், இம்மாதம் 15ம் தேதி நடக்கவிருக்கும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் ராதாரவியை எதிர்த்து பாடகி சின்மயி போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். டப்பிங் சங்கத்தில் உறுப்பினராக இல்லாததால் சின்மயி தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டப்பிங் சங்கத் தலைவராக ராதாரவி போட்டியின்றித் தேர்வு செய்யப்படுகிறார்.
newstm.in

