ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் அதிரடியாக உயர்வு!
ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் அதிரடியாக உயர்வு!

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா, இந்தியாவிலும் அதிவேகமாக பரவத் தொடங்கியதையடுத்து, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பின்பு, படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. மக்கள், ரயில் நிலையங்களில் பயணிப்போர் அல்லாமல், வழியனுப்ப வருபவர்கள் என்று கூட்டம் குவிவதைத் தடுக்கும் பொருட்டு, அப்போது ரயில் நிலைய பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பயணம் செய்வோர் மட்டுமே டிக்கெட் எடுத்து ரயிலில் பயணிக்க முடியும். பின்னர், பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு, பிளாட்பார்ம் டிக்கெட்களின் விலை ரூ.50 ஆக உயர்த்தப்பட்டிருந்தது.

தற்போது, தமிழகத்தில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் காட்பாடி ஆகிய முக்கிய 6 ரயில் நிலையங்களில் மட்டும், பிளாட்பார்ம் டிக்கெட் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பிளாட்பார்ம் கட்டணம் 10 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தை குறைக்கும் நோக்கிலான இந்த புதிய கட்டணம், வரும் ஜூன் 15ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த பிளாட்பார்ம் கட்டண உயர்வால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும், தேவையில்லாமல் பொதுமக்கள் ரயில் நிலையங்களில் குவிவதைத் தடுக்க முடியும் எனவும் நம்பப்படுகிறது.

