வெளிநாடு செல்லக்கூடாது.. ராஜபக்சேவுக்கு நீதிமன்றம் உத்தரவு..!
வெளிநாடு செல்லக்கூடாது.. ராஜபக்சேவுக்கு நீதிமன்றம் உத்தரவு..!

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறையால் இலங்கை அரசு திணறி வருகிறது.
மக்களின் தொடர் போராட்டத்தால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்சே கடந்த 9-ம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து, மஹிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
மகிந்த ராஜபக்சேவின் வீடு, அவரது ஆதரவாளர்களின் வீடுகள், ஹோட்டல்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதையடுத்து, மஹிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் தலைநகரை விட்டு வெளியேறினர்.
திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் அவர்கள் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கிருந்து வெளிநாடு தப்பிச் செல்லலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், ராஜபக்சே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவர்களின் கூட்டாளிகள் வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

