ஒரு வழியாக சிறையில் இருந்து வெளியே வந்தார் ராஜேந்திர பாலாஜி.. ஆனால் இந்த கன்டிஷன்கள் உண்டு !!
ஒரு வழியாக சிறையில் இருந்து வெளியே வந்தார் ராஜேந்திர பாலாஜி.. ஆனால் இந்த கன்டிஷன்கள் உண்டு !!

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு ரத்தானதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். பின்னர் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் வைத்து அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் தமிழகம் கொண்டு வந்து திருச்சி சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த 10ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அரசியல் காரணங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கக்கோரியும் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதில், அரசியல் காரணங்கள் இல்லை என்று தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வசூலிக்கப்பட்ட விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக 32 பேர் புகார் அளித்துள்ளனர் எனவும் கூறினார்.
எனினும், ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். அவர் விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது. மேலும், அவர் மீது நடைபெற்று வரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நிபந்தனை விதித்து உச்சநீதிமன்றம் அவருக்கு 4 வார காலம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

நீதிமன்றம் நான்கு வாரம் இடைக்கால ஜாமீன் அளித்ததையடுத்து, அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கே.டி. ராஜேந்திர பாலாஜி இன்று காலை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
newstm.in

