திமுக சட்டமன்ற உறுப்பினரை கண்டித்து ஊத்துப்பட்டி கிராமத்தில் தீர்மானம்..!!
திமுக சட்டமன்ற உறுப்பினரை கண்டித்து ஊத்துப்பட்டி கிராமத்தில் தீர்மானம்..!!

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் நகர்மன்றத் தலைவர் பதவியை கைப்பற்றும் நோக்கோடு திமுகவில் இரு பிரிவினராக செயல்பட்டு மறைமுக வாக்கெடுப்பின் மூலம் ஒருவர் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று சின்னமனூர் அருகே உள்ள ஊத்துப்பட்டி என்ற கிராமத்தில் சமூக நல்லிணக்க கிராம பொதுமக்கள் கமிட்டியினர் சமுதாய நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், கட்சியில் வஞ்சக செயல்களில் ஈடுபடுவதாக கம்பம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளனர்.
சின்னமனூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊத்துப்பட்டி கிராமத்தில் சுமார் 700 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இன்று இந்த கிராமத்தில் சமூக நல்லிணக்க கிராம பொதுமக்கள் கமிட்டி சார்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கிராம பொதுமக்கள் சார்பாக ஒருமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
அதில் நடைபெற்று முடிவடைந்த சின்னமனூர் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக சார்பில் மூத்த உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் தராமல் கட்சியில் புதிதாக வந்தவர்களுக்கு வாய்ப்பளித்து கட்சிக்குள் பல்வேறு உள்நோக்கத்தோடு செயல்படுவதாக கம்பம் சட்டமன்ற உறுப்பினரும் தேனி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான ராமகிருஷ்ணன் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் எனவும், கட்சி மற்றும் பொது மக்களின் ஜனநாயக ஆதரவைப் புறந்தள்ளி அதிமுக கவுன்சிலர்கள் இடம் குதிரை பேரம் நடத்தி சாதிமத வேறுபாடின்றி அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழும் நகரில் பிரிவினையை தூண்டும் வகையிலும் நயவஞ்சகமான செயலில் ஈடுபட்டதாக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணனின் சூழ்ச்சியை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர்கள் கூறினர்.
மேலும் இந்த சூழ்ச்சியை புரிந்து கொண்டு எப்பொழுதும் போல் அனைத்து மக்களும் சகோதர உணர்வோடு வாழ வேண்டுமெனவும் இதுவரைக்கும் சட்டமன்ற உறுப்பினராக ஜெயித்த கம்பம் ராமகிருஷ்ணன் அவர்கள் பொது மக்களுக்கு நன்றி கூறக்கூட வராத நன்றி மறந்த தன்மைக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் சாதி மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். தற்போது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் அவர்களின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டனத்துக்குரிய தாக உள்ளது எனவே தமிழ்நாட்டில் தற்போது சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் அவர்கள் இந்த விஷயத்தில் கவனம் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
கம்பம் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக கிராம மக்கள் ஒன்று கூடித் தீர்மானம் நிறைவேற்றியது சின்னமனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

