முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் ரூ.2.65 கோடி பறிமுதல்!!
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் ரூ.2.65 கோடி பறிமுதல்!!

-முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கே.பி. அன்பழகன், 2016 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதன் பேரில், கே.பி. அன்பழகன், வருமானத்திற்கு அதிகமாக 11 கோடியே 33 லட்சத்துக்கும் அதிக மதிப்பில் சொத்து சேர்த்ததாக தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவால், வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் 53 இடங்கள் உள்ளிட்ட 58 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அதில் 2 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 650 ரூபாய் பணம், 6.647 கிலோ தங்க நகைகள், சுமார் 13.85 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கணக்கில் வராத 2 கோடியே 65 லட்சத்து 31 ஆயிரத்து 650 ரூபாய் பணம், வங்கி பெட்டக சாவி மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், வழக்கு, புலன் விசாரணையில் உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
newstm.in

