விவசாயி மகள்களுக்கு சம்பளம்.. ராஜ்யசபா எம்பி அதிரடி..!
விவசாயி மகள்களுக்கு சம்பளம்.. ராஜ்யசபா எம்பி அதிரடி..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் 5 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில், ஹர்பஜன் சிங்கும் ஒருவர்.
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது. பெருவாரியான இடங்களில் பெற்ற வெற்றியால், மேலவையில் 5 இடங்களையும் அக்கட்சியால் பெற முடிந்தது.
இந்நிலையில், ஆம் ஆத்மியின் 5 உறுப்பினர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “என்னுடைய எம்பி பதவிக்கான சம்பள தொகையை விவசாயிகளின் மகள்களுக்கான கல்வி மற்றும் பிற நலன்களுக்கு வழங்குவதற்கு விரும்புகிறேன்.
நமது நாட்டின் முன்னேற்றத்தில் பங்காற்றும் பணியில் நான் இணைந்துள்ளேன். என்னால் முடிந்த ஒவ்வொரு செயலையும் நான் செய்து முடிப்பேன்; ஜெய்ஹிந்த்” என்று தெரிவித்துள்ளார்.

