மக்களுக்கு அல்ல, பாஜகவுக்கே சேவை.. சொல்கிறார் திருமாவளவன்..!
மக்களுக்கு அல்ல, பாஜகவுக்கே சேவை.. சொல்கிறார் திருமாவளவன்..!

கடலூர் மாநகராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் அலுவலகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று திறந்து வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு வந்து சில ஆண்டுகள்தான் ஆகிறது.
தற்போது அம்பேத்கர் என்ன செய்தார்..? பிரதமர் மோடி என்ன செய்தார்..? என்று விவாதம் வைத்துக் கொள்ள சவால் விட்டிருப்பது கவனயீர்ப்புக்காக மட்டுமே என தெரிய வருகிறது.
அம்பேத்கரையும் பிரதமர் மோடியும் ஒரே நேர்கோட்டில் வைத்து பார்க்க முடியாது. அம்பேத்கரும் பிரதமர் மோடியும் நேர் எதிர் துருவங்கள்.
இருவரும் ஒரே சிந்தனையாளர்கள் என பாஜக கற்பிக்க முயல்வது ஏற்புடையது அல்ல. அதனால் தான் இசைஞானி இளையராஜா விமர்சிக்கப்படுகிறார்.
அதிமுக தனித்து இயங்கவில்லை; மக்களுக்கு சேவை செய்யாமல் பாஜகவுக்கு சேவை செய்கின்றனர். அதிமுக தன்னிச்சையாக தனித்து செயல்படுமானால் பாஜக தமிழ்நாட்டில் ஒரு பொருட்டே இல்லை” என்று அவர் கூறினார்.

