ரேஷன் கார்டுதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல்.. கோதுமை அளவு குறைப்பு..!
ரேஷன் கார்டுதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல்.. கோதுமை அளவு குறைப்பு..!

மத்திய அரசின் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டின் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி, கோதுமை மற்றும் தானியங்கள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 11 மாநிலங்களுக்கு கோதுமை ஒதுக்கீட்டில் உணவு அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. அதன்படி, கோதுமைக்கான ஒதுக்கீட்டை குறைத்து அரிசிக்கான ஒதுக்கீட்டை உயர்த்தியுள்ளது.
சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த மாற்றம் முன்னதாகவே செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்குப் பிறகு, இந்த மாநிலங்களின் மக்களுக்கு முன்பை விட குறைவான கோதுமையும், அதிக அளவு அரிசியும் வழங்கப்படும்.
அதன்படி தமிழகம், கேரளா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து கோதுமை கிடைக்காது. அரிசி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரகண்ட், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு கோதுமை அளவு குறைவாக மத்திய தொகுப்பிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமை பற்றாக்குறை காரணமாக தமிழகத்திலும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கோதுமை அளவு குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

