டீக்கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு.. சிறுவன் உள்பட மூவர் வெறிச்செயல் !!
டீக்கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு.. சிறுவன் உள்பட மூவர் வெறிச்செயல் !!

டீக்கடைக்காரரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை சிலைமான் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட வைக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் சேக் முகமது(37). இவர் அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சேக் முகமது டீக்கடை முன்பு போடப்பட்டு இருந்த கருங்கல் பலகையில் அதே பகுதியை சேர்ந்த அர்ஜூன் என்கிற பூச்சி(21), அருண்குமார்(21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் உட்கார்ந்து உள்ளனர்.

மூவரும் நீண்ட நேரமாக அங்கேயே அமர்ந்திருந்ததால், இங்கு எல்லாம் உட்கார கூடாது என்று சேக்முகமது கூறியதாக தெரிகிறது. இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்துவைத்தனர். இதனால் சிறுவன் உள்பட மூன்று பேரும் அங்கிருந்து சென்றுவிட்டார்.
ஆனால், சிறிது நேரத்தில் கையில் ஆயுதங்களுடன் மூவரும் டீக்கடைக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். அதாவது, வீட்டுக்கு சென்ற 3 பேரும் அரிவாள் எடுத்து வந்து சேக் முகமதுவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. ரத்தவெள்ளத்தில் தவித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தாக்குதல் தொடர்பான புகாரின் பேரில் சிறுவன் உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
newstm.in

