ஐயா பசிக்குது.. காசு கேட்ட சிறுவன்.. கழுத்தை நெரித்து கொன்ற போலீஸ்..!
ஐயா பசிக்குது.. காசு கேட்ட சிறுவன்.. கழுத்தை நெரித்து கொன்ற போலீஸ்..!

மத்திய பிரதேசத்தின் ததியா மாவட்டத்தில் கோடை கால தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன்போது கலவரம் ஏற்படாமல் தடுக்கவும் பக்தர்களின் பாதுகாப்புக்காகவும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதில், ரவி சர்மா என்ற போலீஸ் கான்ஸ்டபிளும் பணியில் இருந்துள்ளார்.
அப்போது, 6 வயது சிறுவன் ஒருவன் கான்ஸ்டபிளிடம் வந்து, ‘பசிக்கிறது, உணவு வாங்க காசு இல்லை’ எனக் கூறி, பணம் கேட்டுள்ளான். பணம் இல்லை என்று கூறிய ரவி, சிறுவனை விரட்டி விட்டுள்ளார்.
சிறிது நேரம் கழித்து அந்த சிறுவன், மீண்டும் அதே கான்ஸ்டபிளிடம் வந்து பணம் கேட்டுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த கான்ஸ்டபிள் ரவி, சிறுவனை அடித்து, கழுத்தை நெரித்துள்ளார். இதில் அந்த சிறுவன் உயிரிழந்தான்.
அடுத்து என்ன செய்வது என யோசித்த ரவி, சிறுவனின் உடலை காரின் பின்புறம் போட்டுக்கொண்டு குவாலியருக்கு திரும்பியுள்ளார். செல்லும் வழியில், ஆளில்லாத இடத்தில் சிறுவனின் உடலை வீசி விட்டுச் சென்றுள்ளார்.
இதுபற்றிய விசாரணையின்போது, சிசிடிவி. காட்சிகளின் அடிப்படையில் ரவி சர்மா அந்த வழியே காரில் சென்றது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், “ததியா பகுதியில் நடந்த தேர் திருவிழாவுக்கு சென்று விட்டு, 2 கான்ஸ்டபிள்களுடன் காரில் அந்த வழியே வந்தேன்” எனக் கூறியுள்ளார்.

எனினும், தொடர்ந்து அவரிடம் விசாரித்ததில், “மனஅழுத்தத்தில் இருந்தேன். தொடர்ந்து சிறுவன் பணம் கேட்டதில் எரிச்சலடைந்தேன்” என ரவி கூறியுள்ளார்.
இதையடுத்து, ததியா எஸ்பி அமன் சிங் ரத்தோர், ரவியை உடனடியாக பணியில் இருந்து நீக்கும்படி காவலர் தலைமையகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

