சாலையில் வைத்து தந்தையை சரமாரி அடித்துக்கொன்ற மகன்..
சாலையில் வைத்து தந்தையை சரமாரி அடித்துக்கொன்ற மகன்..

சென்னை அடுத்த பொன்னேரி அருகேயுள்ள திருஆயர்பாடி கல்லுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ரவி (48). இவர் மனைவி ராணி மற்றும் அஜித்குமார், சுதாகர் என 2 மகன்களுடன் வசித்து வந்தார். மது பழக்கத்துக்கு அடிமையான தந்தை ரவி தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பொறுக்க முடியாமல் விரக்தி அடைந்த அவரது மனைவி ராணி தனது 2 மகன்களுடன் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசிக்க தொடங்கினார்.
தன்னைவிட்டு பிரிந்து சென்றதால் ரவி மேலும் ஆத்திரம் அடைந்தார். இந்நிலையில் மகன் அஜித்குமார் நடத்திவரும் காய்கறி கடையில் ராணி வியாபாரத்தை கவனித்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ரவி தனது மனைவி ராணியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. உடனே அங்கு வந்த சுதாகர், பொது இடத்தில் வைத்து அவதூறாக பேச வேண்டாம் வீட்டிற்கு செல்லுங்கள் என தந்தை ரவியிடம் கூறியுள்ளார். ஆனால், ரவி அங்கிருந்து செல்லாமல் சுதாகரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமுற்ற சுதாகர், கடையில் இருந்த இரும்பு ராடை எடுத்து சரமாரியாக தந்தையை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் ரத்தவெள்ளத்தில் விழுந்த ரவியை அப்பகுதியினர் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி இறந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தந்தையை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in



