தென்னாப்ரிக்கா டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 202 ரன்களுக்கு ஆல் அவுட் !
தென்னாப்ரிக்கா டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 202 ரன்களுக்கு ஆல் அவுட் !

தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்கியது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், முதல் டெஸ்டில் இந்தியா வெற்றிபெற்றதால், இதிலும் வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றும். இதனால் போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியில் முதுகு வலி காரணமாக விராட் கோலி இந்த போட்டியில் விளையாடவில்லை. கே.எல். ராகுல் கேப்டனாக செயல்படுகிறார். டாஸ் வென்ற கே.எல். ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கே.எல். ராகுல் நிதானமாக விளையாட, மயங்க் அகர்வால் அதிரடியாக விளையாடினார்.

எனினும் மயங்க் அகர்வார் 37 பந்தில 5 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த புஜாரா 3 ரன்களில் வழக்கம் போல் ஏமாற்றினார். 3ஆவது விக்கெட்டுக்கு வந்த ரகானே முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 49 ரன்களுக்கும் 3 விக்கெட்டுகளை இழந்தது.
4ஆவது விக்கெட்டுக்கு கே.எல். ராகுல் உடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. என்றாலும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஹனுமா விஹாரி 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்திருந்தது.

எனினும் கேப்டன் கே.எல் ராகுல் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார், பின்னர் ரிஷப் பண்ட் 17, ரவிச்சந்திரன் அஷ்வின் 46, தாகூர் 0, முகமது ஷமி 9, சிராஜ் 1 ரன்களில் ஆட்டமிழந்தனர். பும்ரா 14 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி 63.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 202 ரன்கள் எடுத்துள்ளது. தென்ஆப்ரிக்க அணி தரப்பில் ரபடா 3, ஒலிவிர் 3, மார்கோ ஜான்சன் 4 விக்கெட் வீழ்த்தினர்.
newstm.in

