பஸ் கண்ணாடியை உடைச்ச ரூட் தல! போலீசில் சிக்கிய 30 கல்லூரி மாணவர்கள்!
அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு.. ரயிலில் வந்த கல்லூரி மாணவர்கள் 30 பேர் சுற்றிவளைப்பு..

சென்னையில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் பயணிகள் அச்சமடைவதோடு அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்படுகிறது. இதனை தடுக்க போலீசார் எவ்வித நடவடிக்கைகள் எடுத்தாலும் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், சென்னை சென்ட்ரல் அருகே கடந்த 4ம் தேதி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் அரசு பேருந்து மீது கல்வீசி உடைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் புதுக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது இந்த சம்பவத்தில் மேலும் பல மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த மாணவர்கள் சென்ட்ரல் மின்சார ரயிலில் வந்து பின்னர் குறிப்பிட்ட பஸ்களில் ஏறி தங்கள் கல்லூரிகளுக்கு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி கைதானவர்கள் அளித்த தகவல் அடிப்படையில், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரலுக்கு ரயிலில் வந்த 30 மாணவர்கள் இன்று காலையில் போலீசார் பிடியில் சிக்கினர். அவர்கள் அனைவரையும் பூக்கடை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in



