வாரிசு அரசியல் மிக மிக ஆபத்தானது.. எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு..!
வாரிசு அரசியல் மிக மிக ஆபத்தானது.. எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு..!

5 மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து டில்லியில் இன்று காலை பாஜக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும், பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர், உக்ரைனில் பலியான மாணவர் நவீன் ஆகியோருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது; “ஜனநாயக நாட்டில் வாரிசு அரசியல் என்பது ஏற்புடையது அல்ல. பாஜகவின் கொள்கைகள் வாரிசு அரசியலுக்கு எதிரானது. அதனால்தான் பாஜகவில் எம்பிக்களின் வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
இதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாஜகவின் இந்த கொள்கையால் 5 மாநில தேர்தலில் வெற்றி கிடைத்துள்ளது. இதை உணர்ந்து மக்கள் பிரதிநிதிகள் செயல்பட வேண்டும்.
ஜனநாயகத்தில் வாரிசு அரசியல் மிக மிக ஆபத்தானது. நாம் அதை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம். பாஜக எம்பிக்களும் இந்த போராட்டத்தில் தீவிரமாக இருக்க வேண்டும்” என மோடி பேசினார்.

