சூப்பர்! நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க தீர்மானம்!!
சூப்பர்! நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க தீர்மானம்!!

இயற்கை விவசாயியான மறைந்த நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வேலூரில் நடைபெற்றது. இதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிறப்பு தீர்மானமாக இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநில தலைவர் அண்ணாமலை இதனை முன் மொழிய நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. வழிமொழிந்தார். சிறப்பு தீர்மானத்தில், உலகம் பல தொழில்கள் செய்து சுழன்றாலும் ஏர் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது என்று கூறியவர் வள்ளுவர்.

அத்தகைய சிறப்பு மிக்க உழவுத்தொழில், அதன் மேன்மையை இழப்பது கண்டு பொங்கி எழுந்த புனிதர் நம் மண்ணைக் காத்த நம்மில் ஒருவர் நம்மாழ்வார். இவர் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர். இந்தியா முழுக்க இயற்கை விவசாயிகளை உருவாக்கியவர்.
நாட்டு மரங்கள், நாட்டு மாடுகள், நாட்டு விதைகள் மீது நாட்டம் மிக்க நாட்டுப்பற்றாளர். தன்னலம் இன்றி தனி ஒரு மனிதராக இயற்கையை மீட்கப் போராடியதற்காகவும் தாய் மண்ணை மனதார நேசித்ததற்காகவும் நம்மாழ்வாருக்கு பாரதத்தின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

