சூப்பர் திட்டம்.. சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களுக்கு உதவினால் பரிசுத்தொகை, சான்றிதழ் !!
சூப்பர் திட்டம்.. சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களுக்கு உதவினால் பரிசுத்தொகை, சான்றிதழ் !!

சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதிப்பவர்களுக்கு 5000 ரூபாய் வெகுமதி அளிக்கும் திட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை மற்றும் போக்குவரத்து துறைகளின் செயலாளர்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், இந்த திட்டம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் 2026ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மோட்டார் வாகனம் காரணமாக நடைபெறும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கோல்டன் ஹவரில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வோருக்கு பாராட்டு சான்றிதழுடன் 5000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசு தொகை மற்றும் சான்றிதழ் தவிர, தேசிய அளவில் 10 விருதுகளும் வழங்கப்படவுள்ளன. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் பரிசு தொகை மற்றும் சான்றிதழ் பெற்றவர்களில் மிகவும் தகுதியான 10 பேர் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் விபத்துகளில் சிக்குவோருக்கு உதவி அளிப்பதில் பொதுமக்களுக்கு உள்ள தயக்கம் நீங்கும் என்றும் இதன் காரணமாக விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
newstm.in

