நள்ளிரவில் பயங்கரம்.. வீட்டின் வெளியே தூங்கிய டிரைவர் கழுத்தறுத்து கொலை..!
நள்ளிரவில் பயங்கரம்.. வீட்டின் வெளியே தூங்கிய டிரைவர் கழுத்தறுத்து கொலை..!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பேரூரணி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (36). இவருக்கு, கனகலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 3 மாதங்களாக வெளியூரில் லாரி ஓட்டும் வேலை பார்த்து வந்த கருப்பசாமி, நேற்று ஊருக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு குடும்பத்தினருடன் உணவருந்திய கருப்பசாமி, வீட்டின் வெளியே படுத்து தூங்கியுள்ளார். நள்ளிரவில், நாய்கள் குரைக்கும் சத்தம் அதிகமாக கேட்டதால் கருப்பசாமியின் மனைவி கனகலட்சுமி வெளியே வந்து பார்த்துள்ளார்.

அப்போது, கருப்பசாமி கழுத்து அறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் தட்டப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த தட்டப்பாறை போலீசார், கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

