ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி.. பிரதமர் மோடி உரை !!
ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி.. பிரதமர் மோடி உரை !!

75-வது சுதந்திர தினம் நாடெங்கும் கொண்டாடப்படும் நிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் அவர் ஆற்றிய உரையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திரத்தை பெற்றுத் தந்த போராட்டத் தியாகிகள் அனைவரையும் இத்தருணத்தில் நினைவுகூர்கிறேன். நாட்டை உருவாக்கியவர்கள், வளர்ச்சியடைய செய்த அனைவரையும் இந்நேரத்தில் நினைவுகூர்கிறேன். கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தடுப்பூசி தயாரித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. கொரோனாவுக்கு எதிரான போரில் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி.

ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு நாட்டின் பெருமையை உலகறிய செய்தவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். ஒலிம்பிக் தடகளத்தில் புதிய வரலாற்றை படைத்தது மிகப்பெரிய நிகழ்வு. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகத்திலேயே நம் நாடுதான் முதலிடத்தில் உள்ளது. கொரோனா தடுப்பூசியை இந்தியாவிலேயே உருவாக்கியதால்தான் மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கிறது.
நாட்டின் வளர்ச்சிக்காக கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டியுள்ளதாகவும் விவசாய உற்பத்தியில் விஞ்ஞானிகள் உதவி அளித்து வருவதாகவும் அவர் பேசினார்.

சுதந்திர தின விழாவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். இது தவிர அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதர்கள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். கொரோனா காலம் என்பதால் சுதந்திர தின விழாவின்போது தனி மனித இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட தற்காப்பு விதிகளும் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பும் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
newstm.in

