கொரோனாவின் 2ஆவது அலை மே இறுதியில் தான் வீழ்ச்சி அடையும்.. ஆய்வு முடிவுகளால் பரபரப்பு !
கொரோனாவின் 2ஆவது அலை மே இறுதியில் தான் வீழ்ச்சி அடையும்.. ஆய்வு முடிவுகளால் பரபரப்பு !

கொரோனாவின் முதல் அலை ஓய்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். ஆனால் தற்போது 2ஆவது அலை வீசி வருவதால் அரசு நிர்வாகங்களும் மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் முதல் அலையின்போது கடந்த அக்டோபர் மாதம் உச்சத்தை எட்டிய நோய்த்தொற்றின் எண்ணிக்கை, 2-வது அலையில் தற்போது 80 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இது இன்னும் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். கான்பூர் ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த மனிந்திர அகர்வால் தலைமையிலான விஞ்ஞானிகள் ‘சுத்ரா’ என்ற கணித மாதிரியை பயன்படுத்தி கொரோனாவின் போக்கை ஆய்வுசெய்துள்ளனர். முதல் அலையின்போது இதே கணிதமுறையை பயன்படுத்திதான் ஆகஸ்ட், செப்டம்பரில் உச்சம் பெற்று 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நோய்த்தொற்று வீழ்ச்சி அடையும் என கணிக்கப்பட்டது.

அதைப்போல் தற்போது 2ஆவது அலையின் போக்கையும் கடந்த பல நாட்களாக ஆராய்ச்சி செய்து முடிவை தெரிந்துள்ளனர். அந்த ஆய்வின் அடிப்படையில், இந்தியாவில் கொரோனா நோய் பரவலின் 2ஆவது அலை இந்த மாதத்தின் மத்தியில் உச்சம் பெற்று, மே மாத இறுதியில் வீழ்ச்சி அடையும் என கூறியுள்ளனர். உச்சநிலையை அடையும்போது தினசரி நோய்த்தொற்றின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கு மேலும், கீழும் ஏறி இறங்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.
அதைப்போல இன்னும் சில நாட்களில் நாட்டிலேயே நோய் பரவலின் முதல் மாநிலமாக பஞ்சாப் மாறும் என்றும், மராட்டிய மாநிலம் அதனை பின்தொடரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். உச்சநிலையை அடையும் கொரோனா நோய்த்தொற்று, குறையும்போது மிக வேகமாக செங்குத்தான சரிவை கண்டு வீழ்ச்சி அடையும் என்றும் தெரிவித்து உள்ளனர். இந்த வீழ்ச்சியானது ஆச்சரியப்படும் அளவுக்கு இருக்கும் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, அரியானா மாநிலத்தின் அசோகா பல்கலைக்கழக விஞ்ஞானி கவுதம்மேனன் தலைமையிலான விஞ்ஞானிகள் தன்னிச்சையாக மேற்கொண்ட ஒரு ஆய்வில், ஏப்ரல் மத்தியில் இருந்து மே மாத மத்திக்குள் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் என கண்டறிந்து உள்ளனர். இதனால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
newstm.in

