சமூக ஊடகங்களுக்கு கிடுக்குப்பிடி.. விதிகளை கடுமையாக்க மத்திய அரசு ரெடி..!
சமூக ஊடகங்களுக்கு கிடுக்குப்பிடி.. விதிகளை கடுமையாக்க மத்திய அரசு ரெடி..!

நாட்டில், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தி, வன்முறைகளை தூண்டும் வகையிலான பதிவுகள், சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன.
இதைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அதன்படி, சமூக ஊடகங்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ராஜ்யசபாவில் நேற்று பாஜக எம்பி சுஷில் குமார் மோடி, “முஸ்லிம் பெண்களை குறிவைக்கும் 'புல்லி பாய்' போன்ற செயலிகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன..?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: “தவறு இழைக்கும் சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக கூறுகின்றனர்.
ஆனால், அது உண்மை அல்ல. பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த, சமூக ஊடகங்களை பொறுப்பேற்க வைப்பது அவசியமாகும். அதற்காக, சமூக ஊடகங்களின் விதிகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால், சமூக ஊடகங்களுக்கு மேலும் கடுமையான விதிகளை அமல்படுத்த அரசு தயாராக உள்ளது. நாட்டு மக்களுக்காக நாம் அதை செய்ய வேண்டியது அவசியமாகும்” என்று அவர் கூறினார்.

