ஆளுநரை ட்விட்டரில் பிளாக் செய்த முதலமைச்சர்.. திடீர் பரபரப்பு !!
ஆளுநரை ட்விட்டரில் பிளாக் செய்த முதலமைச்சர்.. திடீர் பரபரப்பு !!

எனது அமைதியை குலைக்கிறது. எரிச்சலான நான் அவரை ப்ளாக் செய்கிறேன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் ஜகதீப் தன்கருக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சனை உள்ளது. கடந்த தேர்தலில் வெற்றிபெற்று மம்தா முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டபோது கூட மேடையில் சில சம்பவங்கள் உரசல்களை வெளிப்படுத்தின.
தொடர்ந்து நீடித்துவந்த பிரச்சனை, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்திலும் எதிரொலித்தது. அதாவது, மேற்கு வங்காளத்தில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அரசுக்கும், ஆளுநர் ஜகதீப் தன்கருக்கும் இடையே கடும் பிரச்சனை நிலவி வருகிறது.

தனது ஒப்புதலின்றி மேற்கு வங்காள அரசு துணைவேந்தர்களை நியமிப்பதாக ஆளுநர் ஜகதீப் தன்கர் குற்றம்சாட்டி வருகிறார். மேலும் நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை விமர்சித்து இருந்தார்.
இந்த செயல்பாடுகளால் ஆத்திரமடைந்த மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜகதீப் தன்கரின் ட்விட்டர் கணக்கை பிளாக் செய்துள்ளார். இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது, நான் முன்கூட்டியே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆளுநர் ஜகதீப் தன்கர் தினமும் என்னையும், என் அதிகாரிகளையும் அவமதிப்பது போன்று ட்வீட் செய்து வருகிறார். அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான, நெறிமுறைகளுக்கு எதிரான விஷயங்களை பேசுகிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கு வங்காள அரசாங்கத்தை கொத்தடிமைகள் போல நடத்துகிறார். இது எனது அமைதியை குலைக்கிறது. இதனால் எரிச்சலான நான் அவரை ப்ளாக் செய்கிறேன், என வெளிப்படையாக கூறியுள்ளார். இதனால் இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக கூறமுடியாது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
newstm.in

