உயிரிழந்த மகனின் உடலை 90 கி.மீ பைக்கில் கொண்டு சென்ற தந்தை.. அதிர்ச்சி வீடியோ !!
உயிரிழந்த மகனின் உடலை 90 கி.மீ பைக்கில் கொண்டு சென்ற தந்தை.. அதிர்ச்சி வீடியோ !!

உயிரிழந்த மகன் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அதிக தொகை கேட்டதால், 90 கிலோ மீட்டர் தூரம் வரை இருசக்கர வாகனத்தில் தந்தை தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டை மாவட்டம் பெத்வேல் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மலு. இவரது 10 வயது மகன் ஜெசேவா சிறுநீரகம் பாதிப்பால் திருப்பதி ரூயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிறுவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
எனினும் இன்று அதிகாலை சிறுவன் ஜெசேவா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் சிறுவனின் தந்தை மற்றும் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கினர். இந்த நிலையில், சோகத்துக்கு மத்தியில் தனது மகனின் உடலை மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்சை நரசிம்மலு அணுகினார்.

ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல அதிக அளவு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு அவரிடம் பணம் இல்லை. இதனால் வேதனை அடைந்த நரசிம்மலு தனது மகனின் உடலை பைக்கில் கொண்டு செல்ல முடிவு செய்தார். இதையடுத்து உறவினர் ஒருவரை பைக் எடுத்து வர கூறி அந்த பைக்கில் சிறுவனின் பிணத்தை எடுத்துச் சென்றனர்.
திருப்பதியில் இருந்து பெத்வேல் கிராமம் சுமார் 90 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. 90 கிலோ மீட்டர் தூரம் வரை பைக்கில் தந்தை தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோவை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, இது இதயத்தை ரணமாக்குவதாக குறிப்பிட்டுள்ளார். அதில், திருப்பதி ருயா மருத்துவமனையில் உயிரிழந்த ஜெசவா என்ற சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தருமாறு அவனது தந்தை மன்றாடியும் ஒருவரும் உதவ முன்வரவில்லை, என சந்திரபாபு வேதனை தெரிவித்துள்ளார்.
My heart aches for innocent little Jesava,who died at Tirupati’s RUIA hospital.His father pleaded with authorities to arrange an ambulance which never came.With mortuary vans lying in utter neglect,pvt ambulance providers asked a fortune to take the child home for final rites.1/2 pic.twitter.com/mcW94zrQUt
— N Chandrababu Naidu (@ncbn) April 26, 2022
newstm.in

