மகனை இழந்த சோகத்திலும் 7 பேருக்கு வாழ்வளித்து நெகிழ்ச்சி..
மகனை இழந்த சோகத்திலும் மனிதநேயம் காட்டிய பெற்றோர்.. 7 பேருக்கு வாழ்வளித்து நெகிழ்ச்சி..

சேலம் அருகே மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இருதயம் சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. தங்களுக்கு இருதய நோய் இருப்பதால் மகனின் இருதயத்தை தானமாக வழங்குவதாக பெற்றோர் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் விஜயகுமார் - ராணி தம்பதியின் மகன் சுரேந்திரன். இவர் கடந்த 8ஆம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் கூற பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனைக்கு வந்து கதறியழுத பெற்றோர் மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர்.
இதனையடுத்து, சுரேந்திரனின் இருதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட ஏழு உறுப்புகள் வெவ்வேறு இடங்களுக்கு தானமாக வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, இருதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கக்கப்பட்டது.
முன்னதாக அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் 25 கிலோ மீட்டர் தூரத்தை 18 நிமிடங்களில் கடந்து இருதயத்தை சேலம் விமான நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தங்களுக்கு இருதய பிரச்னை இருப்பதால் தங்களை போன்றவர்களுக்கு மகனின் இருதயம் உதவ வேண்டும் என்ற நோக்கத்திலேயே உடல் உறுப்பு தானம் செய்ததாக சுரேந்திரனின் பெற்றோர் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
newstm.in

