3 நாட்களில் மின்தடையால் இருளில் மூழ்கும் அபாயம் என கூறிய அமைச்சர்.. விளக்கம் அளித்த மத்திய அரசு !!
3 நாட்களில் மின்தடையால் இருளில் மூழ்கும் அபாயம் என கூறிய அமைச்சர்.. விளக்கம் அளித்த மத்திய அரசு !!

மின் உற்பத்தி குறித்து டெல்லி உள்பட ஆறு மாநிலங்கள் கவலை தெரிவித்துள்ளன. இது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நாட்டின் தலைநகர் டெல்லியில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. டெல்லிக்கு மின் விநியோகம் அளிக்கும் நிறுவனங்களுக்கு தேவையான நிலக்கரி மற்றும் எரிவாயு கிடைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவேண்டும். கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே நிலக்கரி தட்டுப்பாடு நீடிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் மூன்று நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், அதன்பின்னர் இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் அம்மாநில அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார்.

இந்நிலையில், இது குறித்து மத்திய மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர். கே. சிங் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களிடம் போதுமான மின்சாரம் உள்ளது. நாங்கள் முழு நாட்டிற்கும் மின்சாரம் வழங்குகிறோம். யார் வேண்டுமானாலும், எனக்கு ஒரு கோரிக்கையை கொடுங்கள், நான் அவர்களுக்கு மின்சாரம் வழங்குவேன்.
டெல்லி மட்டுமின்றி, தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படவுள்ளதாக கவலை தெரிவித்துள்ளன. குறிப்பாக, பஞ்சாபில் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அங்கு பல பகுதிகளில் சுழற்சி முறையில் மின் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

விநியோகம் பாதிக்கப்படவுள்ளதாக கெயில் இந்திய நிறுவனத்தின் அலுவலர்கள் தவறான தகவல் அளித்த பிறகு மின் நெருக்கடி குறித்த பீதி உருவானதாக மத்திய அமைச்சர் ஆர். கே. சிங் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களிடமிருந்து விளக்கம் கேட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேவைக்கு ஏற்றார்போல் நிலக்கரி பெறப்பட்டுள்ளது. நான்கு நாள்களுக்கு தேவைப்படும் இருப்பு நம்மிடம் உள்ளது. இதன் மூலம் நாட்டில் பற்றாக்குறை ஏற்படாது என்பது தெரியவந்துள்ளது. நமக்கு மின்சாரம் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டுவருகிறது, என்றார்.
newstm.in

