சென்னை விமான நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நபர்..!!
சென்னை விமான நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நபர்..!!

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் விமான நிலைய கேண்டியன் அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு, சுமார் 40 வயதுடைய ஆண் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விமான நிலைய போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இறந்து கிடந்த நபர் யார்? எப்படி இறந்தார்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் பெயர் ரமேஷ். குடிபோதைக்கு அடிமையான இவர், கடந்த சில ஆண்டுகளாகவே, விமான நிலையத்தில் பிரி பெய்ட் டாக்ஸிகளை சுத்தம் செய்வது, டிராலிகளை தள்ளுவது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதனால் இவா் அளவுக்கு அதிகமான மது எடுத்துக் கொண்டதால் உயிரிழந்தாரா? இல்லை வேறு காரணம் எதாவது உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனையின் முடிவில் தான் தெரிய வரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

