எல்லாத்துக்கும் இளம்பெண்கள் செல்போனில் பேசுவதே காரணம்.. பெண்கள் ஆணைய உறுப்பினர் பேச்சால் சர்ச்சை !
எல்லாத்துக்கும் இளம்பெண்கள் செல்போனில் பேசுவதே காரணம்.. பெண்கள் ஆணைய உறுப்பினர் பேச்சால் சர்ச்சை !

கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரம் இன்றி போராடி வரும் நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் இது தொடர்பாக பெண்கள் ஆணைய உறுப்பினர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் அண்மையில் 19 வயது தலித் சமூக இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பின்னர் இளம்பெண்ணின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே இரவோடு இரவாக எரித்தனர். கொடூர கொலையாளிகளுக்கு அரசு துணைபோவதாக பத்திரிகை நிறுவனங்கள் பரபரப்பாக குற்றம்சாட்டின.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தின் பெண்கள் ஆணைய உறுப்பினரான மீனா குமாரி, இது தொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அலிகார் மற்றும் பரேலி பகுதியில் நடந்த பாலியல் வன்புணர்வு சம்பவங்களை மேற்கோள்காட்டி, இதுபோன்றவை தொடர்கதையாகி வருகிறதே என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அக்கேள்விக்கு பதிலளித்த மீனா குமாரி, இளம்பெண்கள் செல்போனில் பேசுவதை கண்காணிக்க வேண்டும். அவர்கள் செல்போனை ஆண்களுடன் பேசுவதற்கும், அவர்களுடன் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கும் அதனை பயன்படுத்துகிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும், மகள்கள் கவனக்குறைவாக இருப்பதற்கு தாய்தான் பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்ககோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பெண்களே காரணம் என்ற வகையில் கூறிய அவரது கருத்து பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in

