சமோசா சாப்பிட்ட நபரை ஆத்திரத்தில் அடித்து கொலை செய்த கடை உரிமையாளர் !!
சமோசா சாப்பிட்ட நபரை ஆத்திரத்தில் அடித்து கொலை செய்த கடை உரிமையாளர் !!

கடை உரிமையாளரின் அனுமதி இன்றி சமோசா எடுத்து சாப்பிட்ட நபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபாலில் உள்ள சோலா என்ற பகுதியில் ஹரி சிங் அஹிர்வார் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு சீதாராம் என்ற மகன் உள்ளார். இருவரும் கடையை பார்த்துக் கொண்டு வரும் நிலையில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரது கடைக்கு அதே பகுதியில் வசித்து வரும் விநோத் என்பர் வந்துள்ளார்.
விநோத் மதுபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் எப்போதும் மதுபோதையிலேயே அவர் சுற்றிவந்துள்ளார். இந்த நிலையில், கடைக்கு வந்த அவர் கடை முதலாளியான ஹரி சிங்கிடம் கேட்காமலேயே கடையில் இருந்த சமோசாவை எடுத்து சாப்பிட்ட முயன்றுள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த உரிமையாளர் ஹரி, விநோத்தை கண்டித்துள்ளார். போதையில் இருந்த விநோத் பதிலுக்கு ஆபாசமாக பேச இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் அது கைகலப்பாக மாறியது. இந்த மோதலில் விநோத்தை டீ போடும் பாத்திரம் மற்றும் பெரிய கம்பை கொண்டு உரிமையாளர் ஹரி மற்றும் அவரது மகன் சீத்தாரம் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த விநோத் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக விநோத்தின் தாயார் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில், விசாரணை நடத்தி வருகிறது. ஹரிசிங்கும் அவரது மகனும் முதலில் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், இருவரையும் தேடிபிடித்து கைது செய்தனர்.
சமோசா சாப்பிட்டதற்காக ஒரு நபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

