சீசன் காலத்தில் பலாப்பழத்திற்கு வந்த சோதனை !!
சீசன் காலத்தில் பலாப்பழத்திற்கு வந்த சோதனை !!

பழங்களிலேயே சிறப்பு பெற்ற முக்கனியில் இடம்பெற்றுள்ள பலாப்பழத்தின் சுவை அலாதியானது. முட்கள் போன்ற அமைப்பில் வெளிபுறம் இருந்தாலும் மஞ்சள் நிறத்தில் ஒரு கனி அத்தனை சுவைகள் நமக்கு கொடுக்கும். இந்த பழம் குறித்த ஒப்பீடு சங்ககால இலக்கியங்களில் ஏராளம் இருக்கின்றன. தற்கால சூழலில் பலாப்பழம் விளையும் முக்கிய பகுதிகளில் ஒன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டி.
பண்ருட்டி பகுதியில் உள்ள மண் வளம், தட்ப வெப்பநிலை ஆகியவை பலாப்பழம் வளமாகவும், சுவையாகவும் விளைவதற்கு உறுதுணையாக இருக்கின்றன. பண்ருட்டி பலாப்பழத்திற்கு வெளி மார்க்கெட்களில் தனி இடம் உண்டு.

இதையடுத்து சென்னை, திருச்சி, கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்கள், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பலாப்பழம் சீசனின் போது கடலூர் மாவட்ட விவசாயிகள் நல்ல லாபம் பார்ப்பர். ஆனால் நடப்பாண்டு நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏனெனில் அதிக மழை மற்றும் அதிக வெப்பம் காரணமாக விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்ல விளைச்சல் காணப்பட்டது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பலாப்பழங்களை அறுவடை செய்ய முடியாமலும், அப்படியே அறுவடை செய்தாலும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியாமலும் தவித்தனர்.

ஆண்டுதோறும் ஏப்ரம், மே ஆகிய மாதங்களில் பலாப்பழம் சீசன் வருகிறது. இந்த காலகட்டத்தில் பண்ருட்டி, நெய்வேலி, சொரத்தூர், கடாம்புலியூர், பணிக்கன்குப்பம், மேலிருப்பு, மாம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் பலாப்பழம் விளைகிறது. தற்போது விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். விளைச்சலுக்கு ஏற்ற நல்ல தட்ப வெப்பநிலை இல்லை. இதன் காரணமாக பெரும்பாலான மரங்களில் பலாப்பழ பிஞ்சுகள் உதிர்ந்துவிட்டன.
எனவே பலா விவசாயிகளுக்கு உரிய மானியம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களின் எதிர்கால வாழ்வை காக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
newstm.n

